கீழடி அருங்காட்சியகத்துக்கு 43 ஆயிரம் பேர் வருகை

கடந்த செப்டம்பர் மாதத்தில் கீழடி அருங்காட்சியகத்துக்கு 43 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.
கீழடி அருங்காட்சியகத்துக்கு 43 ஆயிரம் பேர் வருகை
Published on

திருப்புவனம்

கீழடி அருங்காட்சியகம்

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக, திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து கீழடி அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் இலவசமாக பார்த்து வந்தனர். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் சுமார் 1500 பேர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

43 ஆயிரம் பேர்

விடுமுறை காலங்களில் எண்ணிக்கை அதிகரித்து சுமார் 2000 பேர் வரை வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் இங்கு உள்ள குளிரூட்டப்பட்ட மினி தியேட்டரில் சுமார் 50 பேர் அமர்ந்து கீழடி வரலாறு குறித்து 15 நிமிடம் ஓடும் குறும்படத்தையும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 43 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் கடந்த ஜூலை மாதம் கடைசி வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com