

சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றி வேல் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ந்தேதி நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் நடத்த தடையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இருப்பதால் விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கோர்ட்டு கூறிவிட்டது. கோர்ட்டு நேரத்தை வீணடித்து விட்டதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு மூன்று வாய்ப்புக்களை வழங்கி உள்ளது.
எம்.எல்.ஏ. வெற்றிவேல் அதிமுக பொதுக்குழுவில் முழுமையாக பங்கேற்கலாம் அல்லது மதியம் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு மட்டும் வரலாம், அதற்கும் விரும்பவில்லை என்றால் பொதுக்குழுவிற்கு செல்லாமல் வீட்டிலே ஓய்வு எடுக்கலாம் என வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளது.