

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கலந்து கொண்டார். மேலும் உதகை சேரிங்கிராஸ் முதல் ஏடிசி வரை ஊர்வலம் நடைபெற்றது.
அதன் பிறகு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டியில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரை செல்கிறோம். அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.