பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், காவல்துறையின் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்
Published on

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் கண்ணாடி  பாஜகவினரால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

அமர்பிரசாத் ரெட்டியை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன்பு அமர்பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டியை நவ.3-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com