

காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தொகுதி 4 எழுத்து தேர்வில் அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த 10 பேர் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது பணி நியமன ஆணைகளை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ராஜமோகன், அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ பயிலும் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ் குமார், இயக்குனர் ஞானதிரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.