

செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள கரியமங்கலம் கிராமத்தில் பிரதமர் மோடி மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யா ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, கரியமங்கலம் கிராமத்தில் பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பத்திரிகைகளை திறந்தாலே கொலை மற்றும் கொள்ளை செய்தி தான் அதிகமாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மோசமான சூழலை தமிழகம் சந்திக்கும்.
தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். முக்கியமாக குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதில் பின்வாங்கக்கூடாது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் வைத்த 5 பவுன் நகை தள்ளுபடி செய்யப்பட்டதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.