பரபரப்பாகும் தேர்தல்களம்: பிப்., 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் பரப்புரையை தொடங்கும் தி.மு.க.

20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாகும் தேர்தல்களம்:  பிப்., 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் பரப்புரையை தொடங்கும் தி.மு.க.
Published on

சென்னை,

'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை தொடங்க உள்ளது. 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளதாக திமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

“தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com