தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; திருச்செந்தூர் கோவிலில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்

திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்
தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்; திருச்செந்தூர் கோவிலில் யானைக்கு கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் மகள்கள்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. திருச்செந்தூர் கோவிலில் யானை தெய்வானை உள்ளது. இந்த யானை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் தாக்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் யானை பாகன் உயிரிழந்த தினத்தில் உள்ள நட்சத்திரத்தின்படி முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே திருவல்லாவில் உள்ள பரசுராமர் கோவிலில் ஹோம வழிபாடு செய்தனர்.

பின்னர் யானை பாகன் உதயகுமாரின் மகள்களான அக்ஷரா உதயன் (வயது 16), அகல்யா உதயன் (15) ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள யானை தங்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு தந்தையை கொன்ற யானை தெய்வானைக்கு சாப்பிடுவதற்காக கரும்பு, செவ்வாழை, ஆப்பிள், ஏத்தன்பழம் உள்ளிட்ட பழங்களை வழங்கினர். பின்னர் 2 பேரும் யானை காலில் விழுந்து ஆசி பெற்றனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com