'வளர்ச்சி பணிகளை செய்ய பிச்சை எடுக்க போகிறேன்'

குன்னூர் நகராட்சியில் ‘வளர்ச்சி பணிகளை செய்ய பிச்சை எடுக்க போகிறேன்’ என்று வீடியோ வெளியிட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
'வளர்ச்சி பணிகளை செய்ய பிச்சை எடுக்க போகிறேன்'
Published on

குன்னூர்

குன்னூர் நகராட்சியில் 'வளர்ச்சி பணிகளை செய்ய பிச்சை எடுக்க போகிறேன்' என்று வீடியோ வெளியிட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்

குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 18-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரங்கராஜன் உள்ளார். இவர் தனது வார்டில் கடந்த 1 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தனது சொந்த பணத்தில் இருந்து வளர்ச்சி பணிகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வீடியோ வைரல்

எனது கையில் உள்ள பணத்தை பொதுமக்களுக்காக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள செலவு செய்ததால், தற்போது என்னிடம் பணம் இல்லை. இதனால் தொடர்ந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. என்னை நம்பி தேர்வு செய்த மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வளர்ச்சி பணிகளை செய்ய உள்ளேன். மேலும் இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிதி பற்றாக்குறை

இதுகுறித்து நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் கூறும்போது, குன்னூர் நகராட்சியில் தற்போது நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வளர்ச்சி பணிகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. விரைவில் அரசிடம் இருந்து நிதி வந்து சேரும். அந்த நிதி, அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பகிர்ந்து அளிக்கப்படும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com