ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றவே அரசாணை வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி

ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றவே அரசாணை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றவே அரசாணை வெளியீடு - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தசூழலில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

இந்நிலையில் ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றவே அரசாணை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com