கடமையை செய்ய டெல்லி செல்கிறேன் - கமல்ஹாசன்

மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் நாளை பதவியேற்க உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் இன்றுடன் (24-ம் தேதி) முடிவடைகிறது.
இதற்கிடையில் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை ராஜ்ய சபா தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் நா,ளை (25-ம் தேதி) பதவியேற்க உள்ளனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நாளை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"ஒரு இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும், கடமையுமாக இதை கருதுகிறேன்; பெருமையோடு கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். நாடாளுமன்றத்தில் கன்னிப்பேச்சு குறித்து இப்போது சொல்ல முடியாது; உங்கள் வாழ்த்துகள், மக்கள் வாழ்த்துகளுடன் டெல்லி சென்று உறுதிமொழி ஏற்கவுள்ளேன்" என்று கூறினார்.






