

பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அப்பர் தெருவில் உள்ளது வள்ளுவர் திரையரங்கு. இத்திரையரங்கின் உரிமையாளர் நடராஜனுக்கு பழனிச்சாமி, சுப்பிரமணி என்ற இருவருடன் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று இவர்களுக்குள் இடப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தான் வைத்திருந்த கைட் துப்பாக்கியால் பழனிச்சாமி, சுப்ரமணி இருவரையும் சுட்டார்.
இதில் வயிற்றில் குண்டுபாய்ந்த நிலையில் பழனிச்சாமியும், பின்தொடையில் குண்டு பாய்ந்து சுப்பிரமணியும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் தற்போது பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நடராஜனை போலீசார் கைது செய்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.