சேலத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 5 நாட்களுக்குப்பின் மீட்பு

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் மதுரை (வயது 22). இவர் தனது மனைவி மற்றும் 9 மாத பெண் குழந்தையுடன் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்திற்கு அடியில் தங்கியிருந்து கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 5ம் தேதி நள்ளிரவு மேம்பாலம் அடியில் மதுரை தனது மனைவி, குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் மதுரையின் குழந்தையை கடத்திச்சென்றுள்ளார். அதிகாலை விழித்து பார்த்தபோது குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த மதுரை உடனடியாக அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், 5 நாட்களுக்குமுன் கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் இன்று மீட்டுள்ளனர். தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்ற ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.






