கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பரபரப்பு: பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்

கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பரபரப்பு: பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்
Published on

ஈரோடு,

காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெய்வீக காசி என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் பார்க்கும் வகையில் கோவில்களில் திரை அமைத்து, ஒளிபரப்ப பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பிரசித்திபெற்ற கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலிலும் இதற்கான ஏற்பாடுகளை மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

ஆனால் கோவில் செயல் அதிகாரி, கோவிலுக்குள் ஒளிபரப்ப கூடாது என்று அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இதற்கு கண்டனம் தெரிவித்து சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று காலை கோவிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கோவில் நடையை அடைத்துவிட்டார்கள். எனவே நீங்கள் கோவிலுக்குள் இருக்கக்கூடாது என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோவிலைவிட்டு வெளியேறினார்கள்.

சத்திரத்தில் ஒளிபரப்பு

அதன்பின்னர் கோவில் புதுச்சத்திரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தெய்வீக காசி நிகழ்ச்சி திரையிடப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com