

ஊட்டி,
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள நேற்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.பின்னர் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். அவருடன் தமிழக கவரனர் பன்வாரிலால் புரோஹித்தும் சென்றார்.
சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தடைந்தார். அவரை தமிழக அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதேபோல வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.