

சென்னை,
சென்னை காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆயுஷி ராணா என்ற மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டில் 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் எந்த கல்வி நிறுவனங்களிலும் இந்த அளவுக்கு தற்கொலைகளோ, வன்முறை கலாச்சாரமோ நிலவவில்லை. எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு சென்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு வசதியாக அந்த பல்கலைக்கழக தற்கொலை சாவுகள் மற்றும் அங்கு நிகழ்ந்த பிற சட்டவிரோத செயல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.