சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் தடயவியல்துறை துணை இயக்குனர் சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் தடயவியல்துறை துணை இயக்குனர் சாட்சியம்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் தடயவியல்துறை துணை இயக்குனர் சாட்சியம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசாரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, 9 போலீஸ்காரர்களை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளது. இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கைதான போலீஸ்காரர்கள் 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கின் சாட்சியான தடயவியல்துறை துணை இயக்குனர் விஜயலதா ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு வருகிற 9-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விஜயலதா கோர்ட்டில் அளித்த சாட்சியத்தில், ஜெயராஜ், பென்னிக்சின் ரத்தக்கறை படிந்த உடைகள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டன என்பதை போலீஸ் நிலையத்தில் வேலை செய்தவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் அங்குள்ள பதிவேட்டில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் போலீஸ்நிலையத்தில் சுவர்கள், தரையில் ரத்தக்கறை படிந்திருந்தது.

அதை ஆய்வு செய்ததில், அவை மனித ரத்தம்தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது என்ற தகவல்களை அவர் கோர்ட்டில் சாட்சியமாக அளித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com