

திருவாரூர்,
தமிழகத்தின் திருவாரூரில் மிக பழமையான தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. சைவ தலங்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற மற்றும் பஞ்சபூத தலங்களில் மண் தலமாகவும் உள்ளது.
ஆசியாவிலேயே இரண்டாவது மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர் இக்கோயிலின் தேராகும். இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேரினை கோயிலை சுற்றி உள்ள வீதிகளின் வழியே பக்தி பரவசத்துடன் இழுத்து வருவார்கள்.
இந்த ஆழித்தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.