

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆளுங்கட்சியின் தவறுகளை மக்கள் மேடையில் சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது பலமுறை வழக்கு பதிந்து முடக்கப் பார்த்த திமுக அரசு, நேற்று ஒரு படி மேலே சென்று, அவரது உறவினர் பரத் என்பவரை முறையான காரணமின்றி கைது செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும், பகல் கொள்ளைகளும் அதிகரித்து வரும் வேளையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் "இரும்புக் கரம்" ஊடகவியலாளர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் முடக்கி கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதில் மட்டுமே முனைப்போடு இருப்பது வெட்கக்கேடானது!
ஆட்சி முடிய இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில், மீண்டுமொருமுறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட எரிச்சல் தலைக்கேறி, எதிர்க்குரல் கொடுக்கும் அனைவரையும் கைது செய்து தோல்வியைத் தள்ளிப் போடலாம் என்று திட்டமிடுகிறது திமுக அரசு. ஆனால், இந்த சர்வாதிகாரப் போக்கே பாசிச திமுக அரசின் கனவுக் கோட்டையைத் தகர்த்தெறியும்! இது நிச்சயம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.