தேனி: தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு

தேனியில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேனி: தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு
Published on

தேனி,

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியபாபு. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இந்துராணி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இந்துராணி மீண்டும் கர்ப்பம் ஆனார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருப்பதாவும், கருவை கலைத்துவிடுமாறும் கூறியுள்ளார்.

அதன்படி இந்துராணி அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயிற்றில் இருந்த 3 மாத சிசுவை வெளியேற்ற சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இந்திராணியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவருடைய கணவர் பாண்டியபாபு இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்துவதற்காக அவருடைய உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு உள்ளனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com