

சென்னை,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 6-ந்தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த 78 பேர், அவர்களுடைய வீடுகளில் தங்கியிருந்த உறவினர்கள் என மொத்தம் 96 பேர் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 65 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேரள மாநிலம் மூணாறில் பொட்டிமுடி பகுதிக்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடு கட்டித்தரவேண்டும். ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்தை அளிக்கவேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தொல்.திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.