மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது- டிடிவி தினகரன்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது- டிடிவி தினகரன்
Published on

சென்னை,

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.

அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர் ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது என்று கூறினர்.

வங்கி அதிகாரிகளின் இந்த தவறான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகள் மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com