640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: ஓசூர் மாநகராட்சி கவுன்சிலரான சட்டக்கல்லூரி மாணவி

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் இளம் வயது வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி யசஷ்வினி தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகி உள்ளார்.
640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: ஓசூர் மாநகராட்சி கவுன்சிலரான சட்டக்கல்லூரி மாணவி
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தேர்தலில், 13-வது வார்டில் தி.மு.க. சார்பில் யசஷ்வினி (வயது 22) என்ற சட்டக்கல்லூரி மாணவி போட்டியிட்டார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடைய கணவர் மோகன், தி.மு.க. உறுப்பினர் ஆவார். இவர் விவசாயம் மற்றும் ரோஜா சாகுபடி செய்து வருகிறார். இவர்கள், ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

தேர்தலில் 13-வது வார்டில் போட்டியிட்ட யசஷ்வினி 1,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரேவதி 506 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் அனிதா லட்சுமி 306 வாக்குகளும் பெற்றனர்.

கண்காணிப்பு கேமரா கனவு திட்டம்

640 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யசஷ்வினி கூறுகையில், வார்டு பகுதியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். எனது கனவு திட்டம் என்றால் எனது வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி குற்றங்கள் நிகழாத பகுதியாக மாற்ற பாடுபடுவேன். மொத்தத்தில் முழு நேர அரசியல் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com