பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 16 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 16 பேர் பலி
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் மணிலாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லுசோன் தீவை கடுமையாக தாக்கியது.

வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

பாம்பன்கா மாகாணத்தில் ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின. சாலைகளில் பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டன. அங்குள்ள சர்வதேச விமான நிலையம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் அடைந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 16 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள சாமர் மாகாணத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் தெரியவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com