

பாரீஸ்,
உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்தின் படி 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. தற்போது இந்த சட்டமானது, செனட் சபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும்.
இது தவிர, உயர்நிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய கடுமையான சட்டத்தைக் கொண்டு வரும் 2-வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.