ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை

ஊழல் வழக்கில் கைதான பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை
Published on

பனாமா சிட்டி,

மத்திய அமெரிக்க நாடு பனாமா. இந்த நாட்டில் 2009-2014 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர், மார்ட்டினெல் (வயது 67). இவர் பதவியில் இருந்தபோது, போட்டி அரசியல்வாதிகளை அச்சுறுத்துவதற்காக தனியார் உரையாடல்களை பதிவு செய்வதற்கு அரசு நிதியை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், 150 அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாகவும் கூறப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சியான புரட்சிகர ஜனநாயக கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜோஸ் லூயிஸ் வரேலாவையும் உளவு பார்த்ததாக புகார் எழுந்தது.

ஆனால் இந்த வழக்கு பொய் வழக்கு, நான் எந்த குற்றமும் செய்யவில்லை என மார்ட்டினெல் திட்டவட்டமாக மறுத்தார்.

இருப்பினும் மார்ட்டினெல்லை கைது செய்து விசாரணை நடத்த பனாமா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புளோரிடாவில் கோரல் கேப்லஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தபோது அவர் கைது செய்து, பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதன்பின்னர் பனாமா நாட்டில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையில் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கோர்ட்டு விடுதலை செய்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com