கியூபாவில் கம்யூனிஸ்டு கட்சிக்கு புதிய தலைவராக அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு

கியூபா நாட்டில் 1959-ம் ஆண்டு நடந்த புரட்சிக்கு பின்னர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப் பதவியை பிடல் காஸ்டிரோ வகித்தார்.
கியூபாவில் கம்யூனிஸ்டு கட்சிக்கு புதிய தலைவராக அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு
Published on

அவருக்கு பின்னர் அவரது சகோதரர் ராவுல் காஸ்டிரோ அந்த பதவிக்கு வந்தார். இந்த நிலையில் கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் 4 நாள் மாநாடு அங்கு நடந்து முடிந்துள்ளது. அந்த மாநாட்டின் தொடக்கத்தில், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ராவுல் காஸ்டிரோ அறிவித்தார். 89 வயதான அவர் 2011-ம் ஆண்டு, கட்சியின் தலைமைப்பதவியை தனது மூத்த சகோதரர் பிடல் காஸ்டிரோவிடம் இருந்து பெற்றார்.

இவ்விரு சகோதரர்களும்தான் அந்த நாட்டை 1959-க்கு பின்னர் அதிபர்களாக இருந்து தொடர்ந்து ஆண்டு வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. அதிபர் பதவியை விட்டு 2018-ம் ஆண்டு விலகிய ராவுல் காஸ்டிரோ கட்சிப்பதவியில் மட்டும் தொடர்ந்து வந்தார். இப்போது அதில் இருந்தும் விடைபெற்றுள்ளார்.

இதையடுத்து அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு பிடல் காஸ்டிரோ குடும்பத்தினர் அல்லாத ஒருவர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கான அறிவிப்பை கட்சி வெளியிட்டுள்ளது.

மிகுவல் தியாஸ் கேனல், பிடல் காஸ்டிரோ குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com