

வாஷிங்டன்,
உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வு, விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், அமெரிக்க விண்வெளி படைக்காக GPS III-9 என்ற மேம்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை ஏவியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஏவுதலுக்குப் பிறகு, ராக்கெட்டின் முதல் பகுதி அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. சுமார் 90 நிமிடங்களில் செயற்கைக்கோள் பூமியின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தெரிவித்துள்ளது.
GPS III வரிசையில் மொத்தம் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை 9 GPS III செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடைசி செயற்கைக்கோள் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.