லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது; சீனா தகவல்

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கியது; சீனா தகவல்
Published on

இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன. எனினும் இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப்பெறுவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன.

அதன்படி பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் ஒழுங்கமைவு மற்றும் ஒத்திசைவு சார்ந்த படை விலக்கல் 10-ந்தேதி (நேற்று) தொடங்கியதாக சீனா தெரிவித்து உள்ளது. கடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

எனினும் இதுதொடர்பாக இந்திய ராணுவமோ, பாதுகாப்பு அமைச்சகமோ எந்த தகவலும் வெளியிடவில்லை. அதேநேரம் எல்லையில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் திரும்பப்பெறப்பட்டு வருவதாக எல்லையோர வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் லடாக் நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com