

லண்டன்,
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன் இந்தியாவிற்கு இந்த வாரம் வருகை தர உள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பிரிட்டன் பிரதமர் பிறந்தநாளுக்கு அவரது மனைவி கேரி, அமைச்சரவை அறைக்கு ஒரு கேக் கொண்டு வந்தார். ஜூன் 2020 இல், ஊரடங்கு காலத்தில் கேபினட் அறையில் நடந்த அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக் மற்றும் பிரிட்டன் பிரதமர், அவரது மனைவி கேரி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் சட்டத்தை மீறி ஒன்றுகூடி, அரசு அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை மீறுவது ஊழல் குற்றமாக பார்க்கப்படுகிறது.
அது சட்டத்தை மீறிய செயலாகும். இந்த சம்பவத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் பிரதமராக அவர் மாறினார்.
இந்த விவகாரத்தில் அவர்கள் மூவருக்கும் நோட்டீஸ் வந்ததையடுத்து, மூவரும் உடனடியாக அபராதத்தை செலுத்தி மன்னிப்பு கேட்டனர்.
மேலும், ஊரடங்கு காலத்தில் சட்டத்தை மீறி நடைபெற்ற 12 விருந்து நிகழ்ச்சிகளில், 6 பார்ட்டிகளில் பிரதமர் பங்கேற்றிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், அவர் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தி வருகிறார். ஊரடங்கை முறையாக பின்பற்றி, பிரிட்டிஷ் பொதுமக்கள் பெரும் தியாகங்களைச் செய்து கொண்டிருந்தபோது, போரிஸ் ஜான்சன் சட்டத்தை மீறி நடந்து கொண்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகை முடிந்து இந்த வாரம் கூடும் நாடாளுமன்றத்தில், பிரதமர் மீது விசாரணை நடத்த வேண்டுமா என்பதை வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி க்கள் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியான கன்செர்வேட்டிவ் கட்சிக்காரர்கள், பிரதமருக்கு ஆதரவாகவே இருந்தனர். சிலர் மட்டுமே அவருடைய நடவடிக்கைக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.
ஆனால் நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளாக, உக்ரைன் போர் மற்றும் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் ஆகியவை விவாதிக்கப்படும் என்றே தெரிகிறது.இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜான்சனுக்கு ஆதரவாக செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால், மே மாதம் பிரிட்டனில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மேயர் தேர்தல்களுக்கு முன்னதாக இச்சம்பவம், பிரதமர் போரிஸ் ஜாண்சனின் தலைமைக்கு மேலும் ஒரு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.