ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசுவதை சாதாரணமாக உணர்கிறேன் - ஹர்ப்ரீத் பிரார்


ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசுவதை சாதாரணமாக உணர்கிறேன் - ஹர்ப்ரீத் பிரார்
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் ஹர்ப்ரீத் பிரார் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 62 ரன்கள் அடித்தார். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பேர்ஸ்டோ 46 ரன்கள் அடித்தார்.

பஞ்சாப்பின் இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் விராட் கோலி, தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பயமின்றி பந்து வீச பழகி விட்டதாக பிரார் கூறியுள்ளார்.

அத்துடன் எப்போதும் விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்காமல் டாட் பந்துகளை வீச முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி ரன்களை கொடுக்காமல் துல்லியமாக பந்து வீசினாலே விக்கெட்டுகள் தாமாக கிடைக்கும் என்று கூறும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு:-

"பிட்ச் பந்து வீசுவதற்கு நன்றாக இருந்தது. அதில் ராகுல் சாஹரும் நன்றாக வீசினார். ஐ.பி.எல். தொடரில் நான் 6 வருடங்களாக விளையாடி வருகிறேன். எனவே என்னுடைய தன்னம்பிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் இந்த ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசுவதை நான் சாதாரணமாக உணர்கிறேன். அவர்களுக்கு எதிராக என்னுடைய பலத்திற்கு தகுந்தாற்போல் பந்து வீசுகிறேன்.

உண்மையை சொல்லவேண்டுமெனில் நான் எப்போதும் விக்கெட்டுகளை பற்றி நினைப்பதில்லை. அதிகமான டாட் பந்துகளை வீச வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். அந்த பந்துகள் உங்களுக்கு விக்கெட்டுகளை உருவாக்கி கொடுக்கும். பொதுவாக பிட்ச்சில் கொஞ்சம் சுழல் இருந்தால் பவுலர்களின் தன்னம்பிக்கை அதிகமாகும். அது கொஞ்சம் பவுலர்களுக்கு உதவியும் செய்யும்" என்று கூறினார்.


Next Story