டி20 உலகக்கோப்பை: பாண்ட்யாவை விட அவர்தான் துணை கேப்டனாக இருக்க தகுதியானவர் - இர்பான் பதான்


டி20 உலகக்கோப்பை: பாண்ட்யாவை விட அவர்தான் துணை கேப்டனாக இருக்க தகுதியானவர் - இர்பான் பதான்
x

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அவருடைய தலைமையிலான மும்பை அணி 7 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தவித்து வருகிறது. எனவே பாண்ட்யாவை கழற்றி விடுமாறு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்த நிலையில் தேர்வுக் குழு அவரை துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ராதான் இந்தியாவுக்கு சரியான துணை கேப்டன் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- " கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் படி பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தலைமையில் இளம் அணியை உருவாக்கும் வேலைகள் நடைபெற்றன. இருப்பினும் சுமாரான செயல்பாடுகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ச்சியாக விளையாடாததால் பாண்ட்யா மீது கேள்விகள் எழுந்தன. காயங்கள் தவிர்க்க முடியாதது.

ஆனால் இந்திய அணிக்கு நீங்கள் திரும்புவதற்கு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் பங்கு பெறுவது முக்கியம். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மட்டும் காயத்திலிருந்து குணமடைந்ததும் நேரடியாக இந்திய அணிக்குள் வருகிறார். இவ்வாறு நடக்கக் கூடாது. ஏனெனில் அது இதர வீரர்களுக்கு தவறான செய்தியை கொடுக்கும். உலகக்கோப்பை போன்ற தொடரில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வீரரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

ஒருவர் ஸ்பெஷலாக நடத்தப்படும்போது அது அணியின் சூழ்நிலையை பாதிக்கிறது. கிரிக்கெட் என்பது டென்னிஸ் போன்ற விளையாட்டு கிடையாது. எனவே அங்கே ரோகித் அல்லது விராட் அல்லது புதுமுக வீரர் ஆகிய அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தொடர்ச்சியாக செயல்படுவதற்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அந்த இடத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா போன்றவர் மோசமான தேர்வாக இருக்க மாட்டார்" என்று கூறினார்.


Next Story