டாஸ்மாக் கடையில் தகராறு: வாலிபரை வெட்டி கொன்ற பார் ஊழியர்...!


டாஸ்மாக் கடையில் தகராறு: வாலிபரை வெட்டி கொன்ற பார் ஊழியர்...!
x
தினத்தந்தி 9 April 2022 10:30 AM GMT (Updated: 9 April 2022 10:26 AM GMT)

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஜீவா(வயது 23). இவர் நேற்று இரவு காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மதுபாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்த பார் ஊழியர் தமிழ்மணி(28) என்பவரிடம் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிவரச் சொல்லியுள்ளார்.

அதற்கு தமிழ்மணி மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்து சென்ற ஜீவா இரவு 11 மணியளவில் தனது நண்பர்களான பிரேம்குமார், வினோத், அன்புமணி ஆகியோரை அழைத்துக் கொண்டு, மீண்டும் தமிழ்மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜீவாவை வெட்டி உள்ளார். இதில் அவருக்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து உயிருக்கு போராடிய ஜீவாவை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜீவாவின் தாத்தா பன்னீர் (65) அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தமிழ்மணியை கைது செய்தனர். 

Next Story