'பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல' - சித்தராமையா விமர்சனம்


பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல - சித்தராமையா விமர்சனம்
x

அதானி மற்றும் அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என சித்தராமையா விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் வேட்பாளர் ராஜு ஹலகுருவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளுக்கான ஆதரவு விலை வழங்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். நான் முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் 27 லட்சம் விவசாயிகளின் ரூ.8,165 கோடி கடன்களை தள்ளுபடி செய்தேன்.

ஆனால் பிரதமர் மோடி, எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் இதுவரை விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததே இல்லை. அதே சமயம் அதானி மற்றும் அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார்.

பிரதமர் மோடி இந்த தேர்தலில் தோல்வி அடைவார். பா.ஜ.க.வினர் அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கும், சமூக நீதிக்கும், ஏழைகளுக்கும் எதிரானவர்கள். சமூகத்தில் சமத்துவம் இருக்கக் கூடாது என்று கூறுபவர்கள் பா.ஜ.க.வினர் மட்டுமே."

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.


Next Story