இந்தியா உருவாக்கிய சிறந்த கிரிக்கெட் வீரர் யார்..? யோக்ராஜ் சிங் பதில்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் யோக்ராஜ் சிங்கிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.;

Update:2025-10-26 19:39 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிதான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டு அவரின் கெரியரை முடித்ததாக யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங் பலமுறை விமர்சித்துள்ளார். தோனிதான் தம்முடைய மகனின் கெரியரை அழித்ததாகவும் அவர் பகிரங்கமாக பேசியதை மறக்க முடியாது. அதனால் தோனியை தாம் எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? என்று யோக்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த யோக்ராஜ் சிங், “ஆல் ரவுண்டர்களைப் பற்றி பேசினால், கபில் தேவ். பேட்ஸ்மேன்களை பற்றி பேசினால், யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சவுரவ் கங்குலி. ஆனால் யுவராஜ் சிங் இதில் உள்ள அனைவரையும் விட உயர்ந்தவர் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்