சாய் அபயங்கருக்கு எதிராக தான் பிஆர் வேலை செய்ததை நிரூபித்தால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் - சாம் சி.எஸ்

‘புஷ்பா 2’ திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து புகழ்பெற்றவர் சாம் சி.எஸ்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து புகழ்பெற்றார் சாம் சி.எஸ்
வெறும் 3 இண்டிபெண்டண்ட் பாடல்களை வெளியிட்ட சாய் அபயங்கரிடம் 8 திரைப்படங்கள் லைன் அப்பில் உள்ளது. அந்த பட்டியலில், சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாமல் எப்படி இத்தனை படங்களில் சாய் அபயங்கர் கமிட் ஆனார். பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியரின் மகனாக இருப்பதால் சாய் அபயங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சாம் சி.எஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது, நெகடிவ் பி.ஆர் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் தன்னுடைய திறமையை உணர்ந்து கருத்து தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், சிலர் தானே இதுபோன்ற பதிவுகளைப் போட்டு விளம்பரம் தேடுவதாகக் கூறுவதை மறுத்து, அப்படி நிரூபிக்கப்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டார்.
அதில் அவர் "சாய் திறமைவாய்ந்த மியூசிசியன் என்பது எனக்கு தெரியும். அவரை புக் பண்ணிய இயக்குனர்களுக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவருடைய படங்கள் எதுவுமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் நிஜமாகவே அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. அவர் நிறைய பாடல்களை பண்ணி வைத்திருக்கிறார். அவரை கமிட் பண்ணிய டைரக்டர்கள் அவருடைய ஒர்க் பிடித்து தான் பண்ணுகிறார்கள். அவருமே எந்தவித பி.ஆர் வேலைகளும் செய்து வரவில்லை. அவருடைய 2, 3 பாடல்கள்தான் ரிலீஸ் ஆகிருக்கு அதுக்குள்ள எப்படி இவ்ளோ வாய்ப்பு என்று தான் கேட்கிறார்கள்.
மேலும் சாய் அபயங்கரை இப்படி சித்தரித்து நானே இதுபோன்று பதிவிட்டு எனக்கான பி.ஆர் வேலைகளை செய்து வருகிறேனா என ஒருவர் கேட்டார். ஒருவேளை நான் தான் அப்படி போட்டேன் என ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிவிட்டால் நான் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன். அவருக்கு அதிகமான திரைப்படம் கிடைக்கிறது எனக்கு எந்த பீலிங்கும் இல்லை, எனக்கு அப்படி தோணவும் தோணாது, நான் செய்யும் வேலைகளில் மிக திருப்திகரமாக உணர்கிறேன்" என கூறியுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளதாகவும் சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.






