தங்கத்தை விட “கலைமாமணி” விருதுக்கு மதிப்பு அதிகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.அதில் திரைத்துறையை பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் “தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம். ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்” என கூறினார்.






