பட தயாரிப்பில் என்னை கஷ்டப்படுத்தியவர்கள் - நடிகர் சாந்தனு

பட தயாரிப்பில் என்னை கஷ்டப்படுத்தியவர்கள் - நடிகர் சாந்தனு
Published on

நடிகர் சாந்தனு தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கிய ராவண கோட்டம் படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதில் நாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். பிரபு, இளவரசு, சஞ்சய், தீபா ஆகியோரும் உள்ளனர்.

ராவண கோட்டம் பட நிகழ்ச்சியில் சாந்தனு பேசும்போது, ''இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்து இருந்தார். படப்பிடிப்பில் நிறைய பிரச்சினைகள் வந்தன. 30 நாட்களுக்கு ஒதுக்கிய தொகை 19 நாட்களிலேயே காலியானது. மாடு பார்த்தவருக்கு ஆயிரம், கயிறு கொண்டு வந்தவருக்கு ஆயிரம், மாட்டை பிடித்து வந்தவருக்கு இரண்டாயிரம், மாட்டை கொண்டு வந்த வண்டிக்கு ஐந்தாயிரம் என்றெல்லாம் பில் இருந்தது. இப்படி நிறைய கஷ்டங்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணமும் வந்தது.

பணத்துக்காக மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை கற்றேன். சக நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்தனர். படப்பிடிப்பில் காலில் ரத்தம் வர நடித்தேன். கதாபாத்திரத்துக்காக செருப்பு போடாமல் லுங்கி கட்டிக்கொண்டு திரிந்தேன். கருவேல மர அரசியல், தூவல் கலவரம், காதல் போன்ற விஷயங்கள் படத்தில் இருக்கும். படம் சிறப்பாக வந்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும்''என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com