

சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்படும் மூத்த பண்பட்ட அரசியல் தலைவர்களில் பிரணாப் முகர்ஜி முக்கியமானவர். அவருக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து சிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், 1969-ம் ஆண்டு இந்திய மாநிலங்களவை உறுப்பினராக முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் அரசியலில் தீவிரமாக செயலாற்றியவர். முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், இந்திராகாந்தி, மன்மோகன்சிங் ஆகியோரது ஆட்சி காலத்தில் திறம்பட நிர்வாகம் செய்தவர்.
இந்திய குடியரசின் 13-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2012 முதல் 2017 வரை சிறப்பாக செயலாற்றி அனைவரிடத்திலும் நற்பெயர் பெற்ற மூத்த அரசியல் தலைவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்திருப்பது சாலச்சிறந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.