கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு

தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மண்டியா, குடகு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.

பருவமழை தொடங்கிய முதல் நாளே, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மங்களூரு நகரத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் சூழ்ந்துகொண்டன. மேலும், மலை நாடு என அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் இரு முறை நிரம்பின. மேலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அதன் பிறகு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பை கருதி, வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நஞ்சன்கூடு, மண்டியா மாவட்டங் களில் ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன.

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 4 கிளைகள் உள்ளன. தற்போது கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், லிங்கனமக்கி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் அந்த அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை சரியாக மழை பெய்யாததால், ஜோக் நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தற்போது தான் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com