22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்; கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

22 சதவீத ஈரப்பத நெல்ல கொள்முதல் செய்ய வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்த போது
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்த போது
Published on

கருத்து கேட்பு கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக விவசாயிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பறக்கும் படை

நாகை மாவட்டத்தில் எப்பொழுதும் இல்லாத வகையில் அறுவடை காலத்தில் தொடர் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட இழப்பிற்கு பயிர் காப்பீடு பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்வதை தடுக்க மாவட்ட எல்லையில் பறக்கும் படை அமைக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மழையின் காரணமாக நிறம் மாறிய நெல்லையும் எவ்வித பணம் பிடித்தம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

கண்காணிப்பு குழு

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை ஏற்படுத்திட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் புகார்களை முதுநிலை மண்டல மேலாளர் தெரிவிக்கலாம். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com