

திருப்பத்தூர்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டது. மேலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகளை மூட வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.
அதன்படி 23 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும் தியேட்டர் வளாகத்தில் இன்று காட்சிகள் இல்லை என்று அறிவிப்பு வைக்கப்பட்டன.
மேலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 1,104 அரசு தொடக்கப் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கவேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.