கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணிக்கு போட்டித்தேர்வு 2,541 பேர் எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித்தேர்வை 2 ஆயிரத்து 541 பேர் எழுதினர்.
கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணிக்கு போட்டித்தேர்வு 2,541 பேர் எழுதினர்
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு 9 மையங்களில் நடைபெற்றது.

தஞ்சை பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, கமலாசுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவீதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 791 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 2 ஆயிரத்து 541 பேர் தான் தேர்வு எழுதினர். 1,250 பேர் தேர்வு எழுத வரவில்லை.


தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் தேர்வர்கள் யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com