மழையால் 3 வீடுகள் இடிந்தன

ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. அதில் 3 வீடுகள் இடிந்தன.
மழையால் 3 வீடுகள் இடிந்தன
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் கனமழை பெய்தது. அதில் 3 வீடுகள் இடிந்தன.

நெற்பயிர் சேதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 44). விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் ஏலகிரி ஏரிகோடி அருகில் உள்ளது.

அதில், அவர் நெல் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அன்பழகனின் விவசாய நிலத்தில் மழை நீர் தேங்கியது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.

அதேபோல் பல இடங்களில் நெற்பயிர் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 வீடுகள் இடிந்தன

ஏலகிரி ஏரிகோடி அருகில் வசித்து வந்த மீன் வியாபாரி மணி (60) என்பவர் வீட்டில் மனைவி, மகள்கள் என 4 பேரும் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் பின்பக்க மண்சுவர் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்தது. அதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 4 பேரும் திடுக்கிட்டு எழுந்து காயமின்றி வெளியே ஓடி வந்தனர்.

அருகில் உள்ள ஜீவாவின் மனைவி சுலோச்சனா (45) என்பவரின் ஓலை குடிசை, ஏலகிரி கிராமத்தில் உள்ள 2-வது வார்டில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மனைவி செல்வியின் மண் வீடு ஆகியவை இடிந்து விழுந்தன. வீட்டில் தூங்கி கொண்டிருந்த யாருக்கும் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி கிராம ஊராட்சி மன்ற தலைவர் ரகு, தி.மு.க. நகர பொறுப்பாளர் அன்பழகன் ஆகியோர் நேரில் சென்று மழையால் இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com