3-வது முறையாக, தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்

நாக்பூர் மத்திய சிறையில், ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் அசம் அஸ்லாம்.
3-வது முறையாக, தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
Published on

மும்பை,

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி பரோலில் வெளியே வந்தார். பின்னர் பரோல் காலம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்து ஜனவரி 25-ந் தேதி சிறைக்கு திரும்ப வேண்டிய அவர், சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்தநிலையில், அசம் அஸ்லாம் மும்பை வகோலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறுநீர் பாதை தொற்று நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக நயாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்த போது, அவர் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் கூறினர். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிவிடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அசம் அஸ்லாம் நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பரோலில் வெளிவந்து தலைமறைவாகி மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com