6 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்

பரோலில் வந்து 6 வருடங்கள் தலை மறைவாக இருந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
6 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
Published on

பூந்தமல்லி,

மதுரவாயல் கந்தசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், கடந்த 2002-ம் ஆண்டு வாலாஜாபாத்தை சேர்ந்த லட்சுமணன் (47) என்பவரை கொலை செய்த வழக்கில் வாலாஜாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2003-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சரவணன், 2012-ம் ஆண்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். ஆனால் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சுமார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த சரவணன், மதுரவாயல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com