

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 80 வயதை கடந்த முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் முதியவர்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று 2-வது நாளாக முசிறி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜோதிசர்மா மேற்பார்வையில் 7 குழுவினர் முசிறி தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தபால் வாக்கு சேகரித்தனர். இதில், தா.பேட்டை அருகே வடமலைப்பட்டி கிராமத்தில் 105 வயதான முதியவர் கருப்பையா நேற்று தபால் வாக்கு மூலம் தனது ஓட்டை பதிவு செய்து, வாக்குச்சீட்டை சீல் வைக்கப்பட்ட பெட்டிக்குள் போட்டார். பின்னர் அலுவலர்கள், ஓட்டு பெட்டியை பாதுகாப்புடன் வேனில் முசிறி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.