

திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் பசுபதி. இவர் நேற்று முன்தினம் பூண்டி சந்திரசேகர் நகர்ப்பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியினை மேற்கொண்டு வந்தார்.
அச்சமயம் பூண்டி கிராமம் சந்திரசேகர் நகரை சேர்ந்த தண்டபாணி (41) என்பவர் தன் வீட்டின் அருகில் குடிநீர் குழாய் இணைப்பை இணைக்க கூடாது எனக்கூறி அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் அங்கு பணி செய்ய வந்த ஆட்களை அடித்து விரட்டி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு போடப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குழாய்களை அடித்து உடைத்து அதனை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தண்டபாணி தன் வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி மற்றும் தண்டபாணி ஆகியோர் தனித்தனியாக புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.