

பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே தொட்டலஹள்ளி கிராமம் ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் கங்கண சூரிய கிரகணத்தையொட்டி தனது கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய டி.கே.சிவக்குமார் தனது மனைவி உஷாவுடன் சென்று இருந்தார். அப்போது தொட்டலஹள்ளி கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் டி.கே.சிவக்குமார் உற்சாகமாக நீந்தி குளித்தார்.
பின்னர் தனது மனைவி உஷாவுடன் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் தனது முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
40 ஆண்டுகளுக்கு பிறகு...
40 ஆண்டுகளுக்கு பிறகு எனது கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் உற்சாகமாக நீந்தி குளித்தேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது பள்ளி, கல்லூரி நாட்களில் நான் அடிக்கடி எனது தந்தையுடன் காவிரி ஆற்றுக்கு சென்று மீன்பிடித்து சாப்பிட்டு உள்ளேன். காவிரி ஆற்றில் குளித்ததும் எனக்கு புதிய உற்சாகம் பிறந்தது. குளித்து முடிந்ததும் ஆற்றங்கரையில் சிறிது நேரம் பொழுதை போக்கினேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் காவிரி ஆற்றில் குளித்த புகைப்படங்களையும் டி.கே.சிவக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த படத்திற்கு ஏராளமானோர் லைக் செய்து உள்ளனர்.