அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பின் சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க தடையில்லை ஐகோர்ட்டு உத்தரவு

அண்ணாநகர் டவர்ஸ் கிளப் சட்டவிரோதமாக கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பின் சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க தடையில்லை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை அண்ணாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா நிலத்தில் சுமார் 5 ஆயிரம் சதுர அடி நிலம், அண்ணாநகர் டவர்ஸ் கிளப் என்ற தனியார் கிளப்புக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு அருகே உள்ள சுமார் 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும், இந்த கிளப் நிர்வாகம் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளது.

3 ஆண்டு குத்தகை காலம் முடிந்த பின்னர், இந்த நிலத்தை மாநகராட்சி திரும்ப கேட்டபோது, திருப்பித்தரவில்லை. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பதவி வகித்தபோது, இந்த கிளப் நிர்வாகத்திடம் இருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கிளப் நிர்வாகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணாநகர் டவர்ஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரிதான். மாநகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய முடியாது. அந்த கிளப்புக்கு சீல் வைத்து, நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று கடந்த 15-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர்ஸ் கிளப் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களின் விளையாட்டு திறனை வளர்ப்பதற்காக, அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பில் உள்ளரங்க விளையாட்டு மைதானங்கள் உள்ளன. ஐகோர்ட்டின் உத்தரவுப்படி அந்த உள்ளரங்க மைதானங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். எனவே ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கூடாது என்று வாதிட்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு உத்தரவின்படி, அண்ணாநகர் டவர்ஸ் கிளப் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். எனவே, தற்போதுள்ள சூழலில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com